| ADDED : ஜன 11, 2024 04:07 AM
திண்டுக்கல் : ''திண்டுக்கல்லில் வடமலையான் மருத்துவமனையில் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது ''என டாக்டர் ஜாப்ரின் நிஷாந்த் கூறினார்.பெரிய நகரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்துள்ளனர்.அந்த டாக்டர்கள் குழுவினருக்கு மருத்துவமனை சார்பில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு டாக்டர் ஜாப்ரின் நிஷாந்த் பேசியதாவது: திண்டுக்கல்லை சேர்ந்த நாகராஜ் மகன் இளவரசன். அவருக்கு 2 ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தம், பசியின்மை போன்ற பிரச்னைகள் இருந்தன. பரிசோதனையில் அவர் யூரேமிக் நோயால் பாதிக்கப்பட்டது தெரிந்தது. யூரியா, கிரியாட்டின், ஹீமோகுளோபின் அளவுகளும் குறைவாக இருந்தன. சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.அவருக்கு தந்தை நாகராஜ் சிறுநீரகம் வழங்க முன்வந்தார்.2023 டிசம்பரில் நாகராஜின் சிறுநீரகத்தை இளவரசனுக்கு மாற்றும் அறுவை சிகிச்சை 5 மணி நேரம் நடந்தது. இருவரும் கண்காணிப்பில் இருந்தனர். ஒரு மாதத்திற்கு பின் பரிசோதித்தபோது இளவரசனுக்கு யூரியா, கிரியாட்டின், ஹீமோகுளோபின் அளவுகள் சரியான இருந்தன. சிறுநீரக பிரச்னை முற்றிலும் சரியானது. இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர்.நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்புடன் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திண்டுக்கல்லில் சிறப்பாக செய்துள்ளோம். வாலிபர்கள் ஆரோக்கியமாக இருக்க நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும். பொது மக்கள் மாத்திரைகள் அதிகம் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். ரோட்டோர உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர் ஹேமநாத், சிறுநீரகவியல் டாக்டர்கள் தேவ் ஆனந்த், நரேந்திரகுமார், அறுவை சிகிச்சை மயக்கவியல் டாக்டர்கள், மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் சதீஷ் கின்னே, சந்திரமுரளி, முத்துவிஜயன், வேலாயுதம், லோகவிஜயன், சத்திய செல்வம் ஆகியோரை மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் புகழகிரி, இணை நிர்வாக இயக்குநர் சந்திரா புகழகிரி பாராட்டினர். மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி, அவசர சிகிச்சை பிரிவு தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.