| ADDED : டிச 03, 2025 07:13 AM
நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பொக்கிஷம் பனைமரம். அம்மரத்தில் கிடைக்கும் நுங்கு, பனம்பழம், கிழங்கு,கருப்பட்டி போன்ற அனைத்துமே நமக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பனை மரத்தின் பயன்களை பற்றி பெரிதும் எவருக்கும் தெரிவதில்லை. மிகநீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத்தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும்,குளம், கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டியபகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளை குறிக்கவும் வயல்களிலும்தோட்டங்களிலும் நட்டனர். பனைமரம் உயிர் வேலியாகவும் பயன்பட்டது. பனைமரங்கள் குறைந்து போக இதன் அருமை தற்போதைய தலைமுறையினருக்கு தெரியவில்லை. பனைமரம் வளர அதிக ஆண்டுகள் எடுத்து கொண்டாலும் பல தலைமுறைகளை வாழ வைக்கிறது என்பதே சிறப்பு. நகர் வளர்ச்சியின் காரணமாக மனைகள் அதிகரித்து பனைகளும் குறைந்து விட்டது. இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பனைமரம் இல்லாத நிலை உருவாகிவிடும் .இதனை போக்க பனை விதைகளை சேகரித்து அதனை நடும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் திண்டுக்கல்லை சேர்ந்த மணிகண்டன். இதனால் தன் பெயருக்கு முன்னால் பனை நண்பன் என்ற வார்த்தையும் சேர்ந்து பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 2017 முதல் தற்போது வரை 2.25 லட்சம் பனை விதைகளை துவுவதோடு, மரம் நடும் பணிகளை மேற்கொள்கிறார். பெரும்பாலும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளக்கரைகளில் பனைவிதைகளை துாவி அவ்வப்போது பராமரிப்பு பணிகளையும் செய்கிறார்.இலவசமாக வழங்குகிறோம் இன்று நாம் விதைக்கும் பனை நன்கு வளர 25 ஆண்டுகள் வரை ஆகும். அடுத்த தலைமுறையினருக்கு பெரிதும் உதவக்கூடியது. அதற்காக எல்லோரும் பனை நட வேண்டும். இயற்கையில் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் ஆற்றல் பனைமரத்தின் வேரில் உள்ளது. நீர்நிலைகளில் மண் அரிப்பைத் தடுக்கிறது. உண்பதற்கு நுங்கு, பனம்பழம், கிழங்கு, பதநீர், கருப்பட்டி, கற்கண்டு போன்ற உணவுகளைக் கொடுக்கிறது. மருத்துவ குணம் நிறைந்தது. கைவினைப்பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. இதனால் பனை சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும் .பலருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது. பனையின் பலன் தெரியாமல் பலர் அதனை வெட்டி அழிக்கின்றனர். இதை கருதி பனைக்கு ஊயிருட்டும் வகையில் பள்ளி, கல்லுாரி ,தனியார் அமைப்புகள் பலருக்கும் இலவசமாக விதைகளை வழங்கி வருகிறோம். நடவு செய்யும் இடத்தைஆய்வு செய்து அவற்றை ஒழுங்குபடுத்தி பனை விதை நடவிற்கு உதவுகிறோம். இதை நடுவதற்கு பல இடங்களில் இளைஞர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். அதை ஊக்கப்படுத்துவதற்காக இலவசமாக பனை விதைகளை வழங்குகிறோம்.---மணிகண்டன், தன்னார்வலர், திண்டுக்கல்.