ஈரோடு: ஈரோட்டில் காலிங்கராயன் வாய்க்காலில் 2,000 சதுரடி நிலம் வரை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர்.நீர் நிலைகள் மற்றும் அவற்றுக்கு நீர் வரும் வழித்தடங்களை ஆக்கிரமித்தால்
சட்டப்படி குற்றம் என, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், ஈரோடு
வைராபாளையம் அருகே, 'ஸ்வஸ்திக் கார்டன்' பகுதியில், காலிங்கராயன்
வாய்க்காலை ஆக்கிரமித்து, கட்டிடம் கட்டியுள்ளனர்.ஈரோட்டை சேர்ந்த பழைய
இரும்பு வியாபாரி ஐந்தாண்டுக்கு முன், பழைய இரும்பு பொருட்களை இருப்பு
வைக்க, இங்கு குடோன் ஒன்றை வாய்க்காலை ஒட்டி கட்டினார். இந்த குடோன்
கட்டும் போது, 13 அடி அகலமும், 220 அடி நீளம் வரை, 2,800 சதுர அடி
வாய்க்கால் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளார். தற்போது வரை,
கட்டிடத்தை பயன்படுத்தியும் வருகிறார். வெளிமார்க்கெட்டில், இப்பகுதியில்
நிலத்தின் மதிப்பு, சதுர அடி 2,000 ரூபாய். இதன் மூலம், 50 லட்சம் ரூபாய்
அரசு நிலத்தை அபகரிக்கப்பட்டுள்ளது. இச்செயலுக்கு பொதுப்பணித்துறை
அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதுதான் வேதனை.பி.பி. அக்ரஹாரம்,
வைராபாளையம் பகுதியில், தோல் தொழிற்சாலை, பிளிச்சிங் பட்டறைகள் அதிகம்.
குடியிருப்புகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைகளில்
இருந்து வரும் கழிவு நீரால், காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசன வசதி
பெறும் நிலப்பகுதி பாதிக்கப்பட்டது.விவசாயிகள் சார்பில், நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டு, முடிவில் விவசாய நிலங்கள் பாதிக்காமல் இருக்க,
காலிங்கராயன் வாய்க்காலில், 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வடபுறம் சுவர்
கட்ட திட்டமிடப்பட்டது. சாக்கடை நீர் செல்லவும், சுவற்றிக்கு வட பகுதியில்,
சிறிய வாய்க்கால் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.வாய்க்கால் சுவர்
கட்டுவதற்காக வாய்க்காலை அளந்து, கல் நட்டு, நீல நிறத்தில் பெயின்ட்
அடிக்கப்பட்டது. மேலும், வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிங்களில்,
வாய்க்காலுக்கு சொந்தமான இடம் வரையில் அம்பு குறியிட்டு வரைந்ததுடன்,
ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றும் படியும் கூறிச்சென்றனர்.அதன் பின்னர்,
இப்பகுதியில் காலிங்ராயன் வாய்க்கலுக்கு வட கரையில் சுவர் கட்டப்பட்டது.
மேலும், சாக்கடைக்காக சிறிய கால்வாயும் வெட்டப்பட்டது. ஆனால்,
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், ஆக்கிரமிப்பு கட்டிடத்துக்கு ஏற்பட,
கால்வாய் சுவரை வளைத்து கட்டிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தற்போது
வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கால்வாய்க்கு சொந்தமான 2,800 சதுரடியை
ஆக்கிரமித்ததுடன், அதன் தொடர்ச்சியாக, கால்வாயை ஆக்கிரமிக்க, வழிவகை
ஏற்படுத்தி தந்துள்ளனர். இந்த கட்டிடத்துக்கு அடுத்தடுத்து உள்ளவர்கள்
கால்வாயை தங்கள் வசதிக்கு ஆக்கிரமித்துள்ளனர். இதனால், அரசின் பல கோடி
ரூபாய் மதிப்பிலான நிலம் சுவாகா செய்துள்ளனர்.கால்வாயை சர்வே செய்து,
ஆக்கிரமிப்பு நிலத்துக்கு அம்புக்குறியிட்டு, அகற்றக் கூறிய அதிகாரிகள்,
ஆக்கிரமிப்பை தாண்டி, கால்வாய்க்கு வளைத்து சுவர் கட்ட காரணம்
என்ன?காலிங்கராயன் கால்வாய் நீர் வரும் வழியை ஆக்கிரமித்து கட்டியவர்
மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும்
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகரில் எங்கெல்லாம், அதிகாரிகளுடன் கைகோர்த்து, நீர்நீலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என, கண்டறிய வேண்டும்.