ஈரோடு: ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், டேனரி வீதியை சேர்ந்தவர் ஞானபால், 60; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான், 35 ஆண்டாக தோல் பதனிடும் ஆலை, தோலினால் செய்யப்பட்ட பொருள், கெமிக்கல் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறேன். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ராணிப்பேட்டையில் குடோன் வைத்து நடத்தி வந்தேன். கடந்த, 2020ல் சிறுநீரக பிரச்னை ஏற்பட்டு, 2021ல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். இதனால் தொழிலை முழுமையாக கவனிக்க முடியாமல், நிறுவனத்தில் பணியாற்றிய பரமகுரு, கோபி, ஜமுனா மற்றும் தணிகவேலை நிர்வகிக்க தெரிவித்திருந்தேன். சிகிச்சையில் இருந்தபோது, பரமகுருவுக்கு வங்கியின் மூலம் பண பரிமாற்றம், தோல் பொருள், கெமிக்கல்ஸ் என, 13.29 கோடி ரூபாய் அனுப்பி உள்ளேன். உடல் நலம் சீரானவுடன், கடந்த ஜன.,ல் ராணிப்பேட்டை குடோனுக்கு சென்று பார்த்தேன். வெளிநாட்டிற்கு அனுப்ப வைத்திருந்த ஏற்றுமதி பொருட்கள் மாயமாகி இருந்தது. பரமகுருவுக்கு தோல் பொருட்கள் உற்பத்தி செய்ய அனுப்பிய, 1 கோடி ரூபாயை, பொருட்களை உற்பத்தி செய்யாமல், கோபியின் சகோதரர் மனைவிக்கு, 70 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். மேலும் எனது அனுமதியின்றி எனது பணம், உற்பத்தி செய்யப்பட்ட ஷூக்கள், இருப்பு வைத்திருந்த தோல் போன்றவற்றை எனது வாடிக்கையாளர்களுக்கே அனுப்பி, 2.57 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.என்னை ஏமாற்றி மோசடி செய்த பரமகுரு, கோபி, ஜமுனா, தணிகைவேல், பசீர், மகாலட்சுமி, டி.எம்.எஸ்., நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி., உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பரமகுரு உள்ளிட்ட ஏழு பேர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.