| ADDED : ஜூலை 10, 2024 02:50 AM
டி.என்.பாளையம்:விவசாயிகள்
மீது பொய் வழக்கு போடும் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து, ௩௦௦க்கும்
மேற்பட்ட விவசாயிகள், கள்ளிப்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க
வலியுறுத்தியும், விவசாயிகள் மீது வழக்கு போடுவதை நிறுத்த கோரியும்,
300க்கும் மேற்பட்ட விவசாயிகள், டி.என்.பாளையம் அருகே
கள்ளிப்பட்டியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார்
தடுத்து போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றதால், இருதரப்புக்கும்
சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்குள்ள
கருணாநிதி சிலை அருகில், கோபி-கள்ளிப்பட்டி சாலையில் உள்ள, விவசாய
சங்க அலுவலகம் முன், வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில்
விவசாயிகள் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:வனத்துறை
சட்டங்களை தவறாக பயன்படுத்தி, விவசாயிகள் மீது பொய் வழக்கு
போடுவதை நிறுத்த வேண்டும். வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க
வழிவகை செய்ய வேண்டும். பயிர்களை சேதம் செய்தால் கூட்டுத்தணிக்கை
மேற்கொண்டு, இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். சத்தி முதல் அந்தியூர்
வரையிலான வனப்பகுதியை ஒட்டிய கிராம பகுதியில் புதிதாக
அறிவிக்கப்பட்ட யானை வழித்தடங்களை மறுபரிசீலனை செய்து மாற்றி
அறிவிக்க வேண்டும். வன எல்லை பகுதியில் அகழி மற்றும் தடுப்பு வேலியை
முறையாக அமைக்க வேண்டும். விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளில்,
குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், வழக்கு தொடர்ந்த அதிகாரிகள் மீது
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை
நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியல், சாகும்வரை
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு கூறினர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கங்களை சேர்ந்த சுபி தளபதி, காவுத்
கார்த்திகேயன், சஞ்சீவி முருகேஷ் உள்ளிட்ட டி.என்.பாளையம்
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள்
கலந்து கொண்டனர்.