ஈரோடு: சட்டசபை மதிப்பீட்டுக்குழு தலைவர் கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில், அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள் காட்டுமன்னார்கோவில் சிந்தனைசெல்வன், மயிலம் சிவகுமார், ஆரணி சேவூர் ராமசந்திரன், எக்மோர் பரந்தாமன், கூடுதல் செயலர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.இதில் தலைவர் அன்பழகன் பேசியதாவது: இக்குழுவானது, அரசு துறைகளின் செலவு, நிதி பயன்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை ஆய்வு செய்துள்ளது. வளர்ச்சி திட்டப்பணிகள், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி, அத்திட்டப்பணிக்கு தேவையான கூடுதல் நிதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. ஒவ்வொரு திட்டப்பணியிலும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.பின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 12 பயனாளிகளுக்கு, 72,000 ரூபாய் மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள், மாவட்ட தொழில் மையம் சார்பில், 5 பயனாளிகளுக்கு, 1.16 லட்சம் ரூபாய் மானியத்தில், 4.46 லட்சம் ரூபாய் மதிப்பில் தொழில் முதலீட்டுக்கான மானியம் வழங்கப்பட்டது. எஸ்.பி., ஜவகர், இணை ஆணையர் (மாநில வரி- ஈரோடு கோட்டம்) லட்சுமி பவியா தண்ணீரு, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.