உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் அடுத்தடுத்து இரு சாலை மறியல் :2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோபியில் அடுத்தடுத்து இரு சாலை மறியல் :2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோபிசெட்டிபாளையம்: கோபி பகுதியில் அடுத்தடுத்து நடந்த இரண்டு சாலை மறியல் போராட்டங்களால் பரபரபபு ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கோபியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில், காசிபாளையம், கணபதிபாளையம் சுற்று வட்டார மாணவ, மாணவியர் பலர் படிக்கின்றனர். சத்தியமங்கலத்தில் இருந்து கோபி செல்லும் பஸ்கள் காசிபாளையம் பஸ் நிறுத்தத்தில் முறையாக நிற்பதில்லை. மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். நேற்று காலை 8 மணிக்கு வந்த பஸ் நிற்காமல் சென்று விட்டது. ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக சத்தி - கோபி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கடத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: காசிபாளையம், கணபதிபாளையம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கோபியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்றனர். ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிக்கு வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் அனைவரும் காசிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். சமீப காலமாக இங்கு பஸ்கள் முறையாக நிறுத்துவதில்லை. மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காசிபாளையத்தில் பஸ்கள் நிறுத்த வேண்டும். காலை மற்றும் மாலையில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆர்.டி.ஓ.. பழனிசாமி, தாசில்தார் முருகன், டி.எஸ்.பி., சுந்தர்ராஜன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின், மறியல் கைவிடப்பட்டது. இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மற்றொரு மறியல்: தாசம்பாளையம் தனியார் பள்ளி கழிவு நீர், பிச்சாண்டம்பாளையம் குளத்தில் கலப்பதால், அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக கூறி, கோபி- ஈரோடு சாலையில், தாசம்பாளையத்தில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒத்தக்குதிரை, கூகலூர், பாரியூர் வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. ஆர்.டி.ஓ., பழனிசாமி, டி.எஸ்.பி., சுந்தர்ராஜன் ஆகியோர், நாளை (இன்று) தீர்வு காண்பதாக உறுதி கூறினர். மறியல் கைவிடப்பட்டது. கோபி பகுதியில் அடுத்தடுத்து நடந்த மறியலால், நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ