உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு விருந்தினர் மாளிகைகளை ஆக்கிரமித்த அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு முகாம் ஆரம்பம்

அரசு விருந்தினர் மாளிகைகளை ஆக்கிரமித்த அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு முகாம் ஆரம்பம்

ஈரோடு: ஈரோடு அரசு விருந்தினர் மாளிகையில் உள்ளாட்சி தேர்தலுக்காக அ.தி.மு.க.,வினர் அத்தனை அறைகளையும் பிடித்து வைத்துக் கொண்டனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினர், நேற்று முதல் வரும் 8ம் தேதி இரவு 7 மணி வரை, அந்தந்த மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களிடம், மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். ஈரோடு மாநகர மாவட்ட அ.தி.மு.க.,வுக்கு அலுவலகம் இல்லை. பொதுப்பணித் துறைக்கு சொந்தமான காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் நேற்று மனுக்களை பெறத்துவங்கினர்.

அங்குள்ள பொறிஞர் ராமசாமி அரங்கில், ஈரோடு மாநகர மாவட்ட பொறுப்பாளர் எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மனுக்களை வழங்கினார். ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, சூரம்பட்டி நகர செயலாளர் ஜெகதீசன் முதல் மனுவை வழங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிசாமி, நகர செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி உட்பட பலர் பங்கேற்றனர். மாநகராட்சி மேயர் பதவிக்கு 25 ஆயிரம் ரூபாய், கவுன்சிலர் பதவிக்கு 5,000 ரூபாய், நகராட்சி தலைவருக்கு 10 ஆயிரம் ரூபாய், கவுன்சிலருக்கு 2,000 ரூபாய், டவுன் பஞ்சாயத்து தலைவருக்கு 2,500 ரூபாய், கவுன்சிலருக்கு 500 ரூபாய், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 5,000 ரூபாய், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 2,000 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பத்தில் பெயர், விலாசம், அ.தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை எண், போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் பதவி, தொகுதி, மாவட்டம், செலுத்திய தொகை ஆகிய விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பவானி, கோபி, அந்தியூர், பெருந்துறை, பவானிசாகர் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு அந்தந்த தொகுதியில் மனுத்தாக்கல் துவங்கியது. ஈரோடு கிழக்கு, மேற்குத்தொகுதி, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கும், ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் தனித்தனியாக அறைகளை ஒதுக்கி, அ.தி.மு.க., கொடி வர்ணத்தில் தொகுதி பெயர் எழுதி, போர்டு வைத்து மனுக்களை பெற்றனர்.

அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., உட்பட மக்கள் பிரதிநிதிகள், அரசால் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட தகுதி கொண்டவர்கள், குறைந்த வாடகையில் தங்குவதற்காக அரசு விருந்தினர் மாளிகை கட்டப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான அறைகளை 8ம் தேதி வரை, அ.தி.மு.க.,வினர் ஆக்கிரமித்துள்ளனர்.கோபிசெட்டிபாளையம்: கோபியிலும், பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகையை அ.தி.மு.க.,வினர் ஆக்கிரமித்துள்ளனர். நேற்று விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியை வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், ரமணீதரன், நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோபி, அந்தியூர், பவானிசாகர், பவானி, பெருந்துறை ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு இங்கு விருப்ப மனு பெறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ