ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களில், குறிப்பிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.தொ.மு.ச., உள்ளிட்ட சில சங்க தொழிலாளர்கள், தற்காலிக பணியாளர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அ.தி.மு.க., உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர், ஓய்வு பெற்றவர்களும், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பஸ் ஸ்டாண்ட்களில் அரசு பஸ்களை இயக்கிய டிரைவர், கண்டக்டர்களிடம் கை கூப்பி வணங்கி, 'பஸ்களை இயக்க வேண்டாம். போராட்டத்துக்கு ஆதரவு வழங்குங்கள்' என வேண்டினர்.ஈரோடு பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ் எண்:15ல் கண்டக்டரிடம் முறையான லைசென்ஸ் இல்லை என, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டி, பஸ்சை இயக்கக்கூடாது என தடுத்தனர். அங்கு வந்த போலீசார், 'அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து அனுமதி வழங்கி, அவர் பணி செய்கிறார். போராட்டத்தில் ஈடுபடுவர்கள், பஸ்களை தடுக்காமல் நடத்துங்கள்,' என்றனர். இதை தொடர்ந்து பஸ் இயக்கப்பட்டது.நேற்றைய பஸ் இயக்கம் குறித்து, ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்,'ஈரோடு மண்டலத்தில், 304 டவுன் பஸ்களில், 266 பஸ்களும், 368 புறநகர் பஸ்களில், 338 என, மொத்தமுள்ள, 672 பஸ்களில், 604 பஸ்கள் இயங்கின,' என்றனர்.* பெருந்துறை அரசு போக்கு வரத்து பணிமனைகளில் இருந்து, 75 சதவீத பஸ்கள் இயக்கப்படுவதாக, அரசு போக்குவரத்து கழகம் கூறினாலும், தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.* நம்பியூர் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.* அந்தியூர் போக்குவரத்து பணிமனையில் உள்ள, 86 அரசு பஸ்களில், 69 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.* கோபியில், 71 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது. கோபி அரசு போக்கு வரத்து கழகம் மூலம், கோபியில் இருந்து தினமும், 37 டவுன் பஸ்கள், 47 மப்சல் பஸ்கள் என மொத்தம், 84 பஸ்கள் இயக்கப்படுகிறது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தால், கோபியில் இருந்து நேற்று, 30 டவுன் பஸ்களும், 41 மப்சல் பஸ்களும் என மொத்தம், 71 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது.