| ADDED : ஜூலை 22, 2024 07:54 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்களை உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.கூட்டத்தில், பல்வேறு துறைசார்ந்த மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று அதற்கான தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மனுக்களை ஆன்லைனின் பதிவேற்றம் செய்ய போதிய அலுவலர்கள் இல்லை. மேலும், மனுவை சேகரிக்கும் அலுவலர்கள், 50க்கும் மேற்பட்ட மனுவை பெற்று, கலெக்டர் அலுவலகத்திற்குள் கொண்டு சென்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, ஒப்புகை ரசீது இணைத்து மீண்டும் வழங்குவர். இதனால் காலதாமதம் ஏற்பட்டதால், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வருபவர்கள் அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கி, தங்களது பிரச்னைகளை தெரிவிக்க முடியாத நிலை இருந்தது.கடந்த சில வாரங்களாக நடந்த குறைகேட்புக் கூட்டத்தில், அனைவரது மனுக்களையும் அதிகாரிகள் பெறுவதில்லை என்ற எழுந்த குற்றச்சாட்டு குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக, பொதுமக்களின் மனுவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.குறிப்பாக, அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் இல்லாமல், குறைகேட்பு கூட்டம் நடக்கும் 'ஹாலுக்கு' அருகிலேயே அமர்ந்து, மனுவை பெற்று பதிவேற்றம் செய்தனர். மனுவை உடனுக்குடன் பதிவேற்றம் மேற்கொள்ள ஏற்பாடு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.நேற்று நடந்த கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமையில் 556 மனுக்கள் பெறப்பட்டது.கூட்டத்தில், எஸ்.பி., ரஜத் சதுர்வேதி, சமூக பாதிகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குப்புசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.