குடியிருப்பு சாலையில் அமர்ந்து சரக்கு அடிக்கும் கும்பல்: பொதுமக்கள் அச்சம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் நாளுக்கு நாள் கஞ்சா, மதுபோதைக்கு அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். இவர்கள் பொது இடங்களில் மது அருந்தும் போதும், கஞ்சா போதையில் பல்வேறு இடங்களில் வீண் தகராறு செய்கின்றனர். சில நேரம் மது குடிக்கும் போது ஏற்படும் தகராறு கிராம மக்களிடையே மோதல் உருவாக்குகிறது. கடந்த சில நாட்களாக போதையில் இளைஞர்கள் சிலர் இரவில் வாகனங்களில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுருத்தும் வகையில் சுற்றுவது அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி நகர பகுதியில் கே.பி.ஆர்., நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் அமர்ந்து மது குடிப்போரின் நடவடிக்கை அதிகரித்துள்ளது. அச்சாலை வழியாக செல்லும் மக்கள் அச்சமடைகின்றனர். சாலையில் அமர்ந்து மது குடிப்பதை தட்டி கேட்போரிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர். போதை தலைக்கேறியதும் ஆபாசமாக திட்டிக் கொள்வதும், அவ்வழியாக செல்வோரை வழிமறித்து வீண் தகராறு செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், காலி மதுபாட்டில்களை சாலையில் உடைத்து செல்கின்றனர். எனவே, கள்ளக்குறிச்சி நகரில் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகள் மேற்கொண்டு, பொது இடத்தில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.