| ADDED : மே 02, 2024 10:25 PM
காஞ்சிபுரம்:தமிழகத்தில் மே 1ம் தேதி, தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள், உணவக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என, தொழிலாளர் நலத்துறையினர் முன்னதாகவே அறிவுறுத்தியிருந்தனர்.இருப்பினும், பல்வேறு நிறுவனங்கள் மே 1ம் தேதி விடுமுறை அளிக்கவில்லை என புகார் எழுந்தது. எனவே, தொழிலாளர் நலத்துறையின், அமலாக்கப்பிரிவின் உதவி இயக்குனர் சுதா தலைமையிலான குழுவினர், மே 1ம் தேதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்காத, 57 தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் 94 உணவக நிறுவனங்கள் என, 151 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன.அந்நிறுவன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உதவி இயக்குனர் சுதா தெரிவித்துள்ளார்.