| ADDED : ஜூன் 01, 2024 06:26 AM
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகரில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் துரை மகன் சதீஷ், 27. சுகாதாரத் துறையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் இவரது சகோதரி ராஜேஸ்வரி என்பவருக்கும், உடன் பணிபுரியும் லட்சுமி என்பவருக்கும் இடையே பிரச்னை உள்ளது. இதை தொடர்ந்து சதீஷ், லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் வந்த லட்சுமியின் மகன்கள் அஜித், தினேஷ் ஆகிய இருவரும் சதீஷிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தினர். இதில், சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தார். தடுக்க வந்த சதீஷ் நண்பர் முரளி என்பவர் படுகாயமடைந்து, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.விசாரணையில் தினேஷ், 19, அஜித், 23, மற்றும் கீழ்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவர் என, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.