| ADDED : ஆக 12, 2024 10:18 PM
காஞ்சிபுரம் : விற்பனை விதைகளை தரம் பரிசோதனை செய்து, விற்பனை செய்யலாம் என, விதை பரிசோதனை அலுவலர் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் ஜெயராமன் கூறியதாவது:'ஆடி பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கு ஏற்ப, விவசாயிகள் நெல் மற்றும் காய்கறி விதைகளை ஆடி மற்றும் ஆவணி ஆகிய மாதங்களில் விதைப்பது வழக்கம்.முளைப்பு திறனுடைய தரமான விதைகளை, விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய வேண்டியது, அனைத்து விதை விற்பனையாளர்களின் கடமையாகும்.ஆகையால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், தனியார் விதை விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதைகளை தரமானதாக விற்பனை செய்ய வேண்டும்.எனவே, அனைத்து தனியார் விதை விற்பனையாளர்கள், தங்களிடம் இருக்கும் விதை குவியலில் இருந்து, 100 கிராம் விதை மாதிரிகளை எடுத்து, 80 ரூபாய் பகுப்பாய்வு கட்டணத்தை, விதைப் பரிசோதனை நிலையத்தில் செலுத்தி, முளைப்பு திறனை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.விதை விற்பனையாளர்கள், தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் பட்சத்தில், விதை சட்ட அமலாக்கத் துறை அலுவலர்களால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.