உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வருவாய் துறை ஆன்-லைன் சர்வர்கள் பழுது சான்றுகள் பெற முடியாமல் தவிப்பு

வருவாய் துறை ஆன்-லைன் சர்வர்கள் பழுது சான்றுகள் பெற முடியாமல் தவிப்பு

காஞ்சிபுரம்:ஜாதி, வருவாய், இருப்பிடம் ஆகிய வருவாய் சான்று கேட்டு, ஆன்லைனில் விண்ணப்பித்தால், இரண்டாவது முறையாகவும் விண்ணப்பிக்க வேண்டி உள்ளது என, கிராம மக்கள் புலம்பி வருகின்றனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து தாலுகாக்கள் உள்ளன. இதில், வசிக்கும் மக்கள் ஜாதி, வருவாய், இருப்பிடம் ஆகிய வருவாய் துறை சான்றுகளை பெறுவதற்கு, அரசு மற்றும் தனியார் இ- - சேவை மையங்களில் விண்ணப்பிக்கின்றனர்.விண்ணப்பதாரரின் மனுக்கள், முதலில் கிராம நிர்வாக அலுவலர், பின், வருவாய் ஆய்வாளர், இதையடுத்து, மண்டல துணை தாசில்தார் மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு செல்லும் வகையில் வழி வகை ஏற்படுத்தப்பட்டு உள்ளன.கிராம நிர்வாக அலுவலர் விண்ணப்பதாரரின் மனுக்கள் சரியாக உள்ளதாக என, ஆய்வு செய்து, குறு வட்ட வருவாய் ஆய்வாளருக்கு பரிந்துரை செய்வார்.குறுவட்ட வருவாய் ஆய்வாளர் நேரடியாக குறுக்கு விசாரணை செய்து, மண்டல துணை தாசில்தாருக்கு பரிந்துரை செய்வார். அவர், சரியான ஆவணங்கள் இருந்தால், தாசில்தாருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதன் பிறகு, வருவாய் துறை சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஒரு வாரமாக விண்ணப்பிக்கப்படும் வருவாய் சான்றுகளுக்கு, நேரடியாக மண்டல துணை தாசில்தாருக்கு சென்று விடுகிறது. அந்தந்த மண்டல துணை தாசில்தார்களும், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என, விண்ணப்ப படிவத்தை நிராகரித்து விடுகின்றனர். இதனால், ஒரு வருவாய் சான்றுக்கு, 60 ரூபாய் வீதம் பல முறை செலுத்த நேரிடுகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் தாலுகாவில், ஜாதி சான்று பெற விண்ணப்பத்த நபருக்கு, நேரடியாக மண்டல துணை தாசில்தாருக்கு சென்று விடுகிறது. பொதுவாக ஜாதி, வருவாய், இருப்பிடம் சான்று கேட்டு விண்ணப்பித்தவுடனே, இரு நாட்களில் சான்று வந்துவிட வேண்டும். ஒரு வாரமாகியும் வருவாய் சான்றுகள் கிடைக்கவில்லை.இதனால், அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ- - மாணவியர் சேர்க்கைக்கு ஜாதி, வருவாய் ஆகிய சான்றுகள் இணைக்க முடியவில்லை என, விண்ணப்பதாரர்கள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.எனவே, முறையாக ஆய்வு செய்து, வருவாய் துறை சான்றுகளை தங்கு தடை இன்றி வழங்க வருவாய் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் தாலுகாக்களைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:உயர் கல்வி படிக்க நினைக்கும் மாணவ- - மாணவியர் சேர்க்கைக்கு ஜாதி, வருவாய் ஆகிய சான்றுகள் இணைக்கும் படி அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த வருவாய் சான்றுகள் பெற இ- - சேவை மையத்தில் விண்ணப்பித்தால், நேரடியாக மண்டல துணை தாசில்தாருக்கு சென்று விடுகிறது. அவர், விண்ணப்பம் நிராகரித்து விடுகிறார். இதனால், 60 ரூபாய் கூடுதலாக பணம் செலுத்தி மற்றொரு முறை விண்ணப்பிக்க வேண்டி உள்ளது. பணம் விரையம் ஆவதோடு, நாட்களும் தள்ளிப்போகிறது.இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:விண்ணப்பதாரர் மனு, கிராம அலுவலருக்கு செல்லாமல், தவறுதலாக மண்டல தாசில்தாருக்கு விண்ணப்பித்து விடுகின்றனர். இதுபோன்ற விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து வரட்டும் என, நிராகரித்து விடுகிறோம். வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை