உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கார் மோதியதில் லிப்ட் கேட்டு வந்த பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

கார் மோதியதில் லிப்ட் கேட்டு வந்த பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன், 50; சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று காலை 'யமஹா ரே' இருசக்கர வாகனத்தில், சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் சென்றார்.அப்போது, திருக்கச்சூர் அடுத்த தெள்ளிமேடு பகுதியில் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குப்பம்மாள், 48, என்பவர் 'லிப்ட்' கேட்டு சென்றுள்ளார்.ஆப்பூர் அடுத்த சேந்தமங்கலம் அருகே சென்றபோது, ஒரகடத்தில் இருந்து சிங்கபெருமாள் கோவில் நோக்கி வந்த 'மாருதி பலேனோ' கார், சேந்தமங்கலம் சந்திப்பில் வேகமாக திரும்பியது. காரை மணிமங்கலத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், 48, என்பவர் ஓட்டி வந்தார்.அப்போது, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், வீரபத்திரன், குப்பம்மாள் இருவரும் பலத்த காயமடைந்தனர். பாலுார் போலீசார் இருவரையும் மீட்டு '108' ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

'ரயில்வே கேட்'டால் தாமதமாக வந்த '108'

விபத்து ஏற்பட்ட உடன் சக வாகன ஓட்டிகள், '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சிங்கபெருமாள் கோவிலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, ஆம்புலன்ஸ் வர 25 நிமிடங்கள் வரை தாமதமானது. இதன் காரணமாக, ஒரகடத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, இருவரும் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர்.அதன்பின், அடுத்தடுத்து மூன்று ஆம்புலன்சுகள் வந்தன. சிங்கபெருமாள் கோவிலில் இருந்து ஆம்புலன்ஸ் வரும்போது, சிங்கபெருமாள்கோவில் ரயில்வே கேட்டில் சிக்குவதால், அடிக்கடி தாமதம் ஏற்படுவது தொடர்கிறது. எனவே ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விபத்து ஏற்படும் போது, ஒரகடம் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் அனுப்பினால் உயிரிழப்புகளை தடுக்க முடியும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி