ஏகனாபுரம்:சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக, பரந்துார் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில், 5,400 ஏக்கர் தேவை. அதில், 3,750 ஏக்கர் தனியார் வசம் உள்ளது; மீதி, அரசுக்கு சொந்தமான நிலம். விமான நிலையம் அமைப்பதற்கான நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.அரசு, பரந்துார் விமான நிலையத்திற்காக தனியாரிடம் உள்ள நிலம் எடுக்கும் பணிக்கு, முதல் அறிவிப்பை, பிப்., 24ல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, மேல்பொடவூர் கிராமத்தில், 93 ஏக்கர் நிலம், 218 பேர்களிடம் இருந்து வாங்கும் பணி துவங்கியுள்ளது. இரண்டாம் கட்டமாக, சிறுவள்ளூர் கிராமத்தில், 259 பேர்களிடம் இருந்து, 43 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த வாரம் துவங்கியது.தற்போது, மூன்றாவது கட்டமாக, ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள அக்கமாபுரத்தில் 405 பேர்களிடம் இருந்து, 158 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதற்கிடையே, பரந்துார் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் கிராமத்தினர் 600வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏகனாபுரத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும் வயல் மற்றும் நெற்கதிர் எடுக்கவிருக்கும் வயல் வரப்பு மீது நின்று, அவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, ஏகனாபுரம் போராட்டக் குழுவினர் கூறுகையில், 'பரந்துார் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாலை வேளைகளில் தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது. தமிழக அரசு, எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காததால், தொடர் போராட்டத்தை கைவிட்டு இனி சட்ட ரீதியாக போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும், வரவிருக்கும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்' என்றனர்.