| ADDED : மே 01, 2024 02:04 AM
கரூர்:'குழந்தையின் பிறப்பு சான்றுக்கு விண்ணப்பிக்க டிச.,31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.அவர், வெளியிட்ட அறிக்கை: குழந்தைகள் பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, ஓட்டுனர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம் பெற, அயல்நாட்டில் குடியுரிமை பெற பிறப்பு சான்றிதழ் இன்றியமையாத ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து, 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்குப் பின் பதினைந்து ஆண்டுக்கு, 200 ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது. இவர்கள், பிறப்பு சான்று பெற வரும், டிச.,31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.