| ADDED : ஆக 21, 2024 02:18 AM
கரூர்:ஆத்துப்பாளையம் அணை விரைவில் நிரம்ப உள்ளதால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்.,யூனியன், கார்வாழி ஆத்துப்பாளையம் அணை, 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த, 2019 நவம்பர் மாதம் நிரம்பியது. இதையடுத்து, பாசனத்துக்காக நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் கடந்த, 2020 மற்றும் 2021ல் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப் பட்டது.இந்நிலையில், கடந்த, 15 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து துவங்கியது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.04 அடியாக இருந்தது. இதனால், விரைவில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், பாசனத்துக்காக நொய்யல் வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆத்துப்பாளையம் அணை மூலம், க.பரமத்தி, கரூர் பஞ்., யூனியன் பகுதிகளில், 19 ஆயிரத்து, 500 ஏக்கர் பாசன வசதி பெறுவது குறிப்பிடத்தக்கது.