கரூர்: சேதமடைந்து வரும் பழைய எஸ்.பி., அலுவலகத்தில், அரசு கலைக்கல்லுாரி மாணவர்களுக்கு ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கரூர் - வெள்ளியணை சாலையில் தான்தோன்றிமலையில் உள்ள, அரசு கலைக்கல்லுாரி மாணவர்களுக்கு, கல்லுாரிக்கு எதிரே தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. அதில், 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்லுாரியில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த, 1995ல் திருச்சியில் இருந்து கரூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அப்போது, கல்லுாரி விடுதி கட்டடம், எஸ்.பி., அலுவலகமாக செயல்பட்டது. பிறகு, கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த திட்ட வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்தில், எஸ்.பி., அலுவலகம் கடந்த, 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.ஆனால், பழைய எஸ்.பி., அலுவலக கருங்கல் கட்டடம் பராமரிப்பு இல்லாமல், சேதமடையும் நிலையில் உள்ளது. அதை சீரமைப்பு செய்து, கரூர் அரசு கலைக்கல்லுாரியில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு, ஒருங்கிணைந்த மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:கரூர் அரசு கலைக்கல்லுாரியில் புவி அமைப்பியல், தாவரவியல், விலங்கியல், கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட, 12 வகையான ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. அதில், பயின்று வரும் மாணவர்கள் தனி இடம் இல்லாமல் தவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில், ஆராய்ச்சி சம்பந்தமான புத்தகங்களை படிக்க வேண்டிய நிலை உள்ளது. சேதமடைந்து வரும் பழையஎஸ்.பி., அலுவலகத்தை சீரமைத்து, அங்கு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். அப்போது, 12 துறைகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கும், இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.