கரூர்: அமராவதி ஆற்றில், பிளாஸ்டிக் குப்பை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட்டத்துக்கு விவசாய பணி மற்றும் குடி நீருக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. அமராவதி அணையில் இருந்து செல்லும், 17 கிளை வாய்க்கால்கள் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.மேலும், அரவக்குறிச்சி, க.பரமத்தி மற்றும் தான்தோன்றிமலை பஞ்., யூனியன் பகுதிகளில் உள்ள, 70க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. தற்போது, கரூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடி நிறைவு பெற்றுள்ள நிலையில், அமராவதி அணையில் இருந்து ஆற்றில், திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த, ஒரு மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதியையொட்டி, கரூர் மாநகராட்சி பகுதிகளில் இருந்து, பிளாஸ்டிக் குப்பை அமராவதி ஆற்றில் அதிகளவில் கலக்கிறது. அந்த பிளாஸ்டிக் குப்பை, திருமுக்கூடலுார் பகுதியில், காவிரியாற்றில் கலந்து மாயனுார் கதவணைக்கும் செல்கிறது. இதனால், விவசாய நிலங்களு க்கு பாதிப்பு ஏற்படுவதுடன், குடிநீரும் மாசுபடுகிறது.எனவே, அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பை கலக்காமல் இருக்கும் வகையில், கரூர் மாவட்ட மாசு கட்டுபாடு வாரியம் மற்றும் கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.