| ADDED : மே 09, 2024 06:28 AM
கரூர் : கரூர், எஸ்.வெள்ளாளப்பட்டி, தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் எல்லை பாதுகாப்பு படையில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஜனவரி மாதம் விடுமுறைக்கு வந்தபோது, வாரிசு சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதேபோல் வாரிசு சான்றிதழ் கேட்டு மூன்று முறை ஆன்லைனில் விண்ணப்பித்தும், நிராகரிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, குப்புசாமி மனைவி ஷர்மிளா கரூர் தாலுகா அலுவலகம் முன் அவரது உறவினருடன் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, வாரிசு சான்றிதழ் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என எழுதப்பட்டிருந்த பதாகையை கையில் ஏந்தி அமர்ந்திருந்தார்.கரூர் டவுன் போலீசார், தாசில்தார் முனிராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட ஷர்மிளாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, உங்களது விண்ணப்பத்தின் மீது கள ஆய்வு செய்தபோது, மற்ற வாரிசுதாரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே உங்களது வாரிசு சான்றிதழ் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, நீதிமன்றம் மூலம் வாரிசு சான்றிதழ் பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்தனர். பின்னர், ஷர்மிளா மற்றும் அவரது உறவினர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.