ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம், யானைகள் வருவதை வனத்துறையினர் உடனடியாக அறிந்து, மக்க ளுக்கு எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில், தேன்கனிக்கோட்டை, உரிகம், அஞ்செட்டி, ஜவளகிரி, ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய, 7 வனச்சரகங்கள் உள்ளன. மொத்தம், 1.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுள்ள வனப்பகுதியில், 468 வகை தாவரங்கள், 36 வகை பாலுாட்டிகள், 272 வகை பறவையினங்கள், புலி காட் டெருமை, சிறுத்தை, மெல்லிய ஓடு ஆமை, மலை அணில், நீர் நாய், முதலை, 4 கொம்புடைய மான் என பல்வேறு வகை உயிரினங்கள் உள்ளன. மேலும், 150 க்கும் மேற்பட்ட நிரந்தர யானைகள் உள்ளன. தவிர ஆண்டுதோறும் அக்., மாதம் கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து, 150 க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு இடம் பெயர்கின்றன.வனப்பகுதிக்குள், 30 ம் மற்றும் வனப்பகுதியையொட்டி, 100க் கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி, கிராமங்களுக்கு படையெடுக்கும் யானைகளால், மனிதர்கள் தாக்கப்படுவதும், பயிர்கள் சேதமாவதும் அடிக்கடி நடக்கிறது.கடந்த, 6 ஆண்டுகளில், 60 பேருக்கு மேல், யானை தாக்கி இறந்துள்ளனர். யானைகள் ஊருக்குள் நுழைவதை உடனடியாக அறிந்து மக்களுக்கு தகவல் தெரிவிக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை வனத்துறை பொருத்தி வருகிறது.முதற்கட்டமாக, தேன்கனிக் கோட்டை, ஜவளகிரி, அஞ் செட்டி, ராயக்கோட்டை ஆகிய வனச்சரகத்தில், யானைகள் அடிக்கடி வெளி யேறும், 17 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கட்டுப்பாட்டு அறை, ஓசூர் மத்திகிரியிலுள்ள மாவட்ட வன அலுவலகத்தில் உள்ளது. யானைகள் இந்த கேமராக்களை கடந்து செல்லும்போது, வனத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தானாக, 'அலர்ட்' சென்று விடும். உடனடியாக சம்பந்தப்பட்ட வனச்சரகத்திற்கு தகவல் தெரிவித்து, யானைகள் இடம்பெயரும் கிராமத்திற்கு வனத்துறையினர் சென்று, மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்.நவீன கேமராக்கள் மூலமாக, யானைகள் வருவதை மக்கள் உடனடியாக அறிய, அந்தந்த கிராமங்களில் ஸ்பீக்கர் வைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கூடிய இந்த கேமராக்களில், யானை போன்ற உருவம் தென்பட்டால் மட்டுமே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் செல்லும். யானை தாண்டா அகழி, சோலார் வேலி, தொங்கும் சோலார் வேலி, இரும்பு கம்பி வேலிகள் அமைத்தும், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியவில்லை. அதனால் வனத்துறையினர் நவீன யுகத்திற்கு மாறி, யானைகளை கண்காணிக்க துவங்கி உள்ளனர்.பகலில் வனப்பகுதியில் யானைகளை கண்டறிவது கடி னம். கிராமங்களில் யானைகள் புகுந்து விட்டால், இரவில் அவை எங்குள்ளன என்பதை கண்டறிவது சிரமம். அதற்காக மொபைல் மானிட்டரிங் வாகனம், வனத்துறை வசம் உள்ளது. அதன் பயன்பாட்டை, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி நேற்று துவக்கி வைத்தார். வாகனம் யானை நடமாட்டம் உள்ள பகுதிக்கு கொண்டு சென்று, 'ட்ரோன்' கேமராவை பறக்க விட்டால், அந்த வாகனத்தில் உள்ள எல்.இ.டி., திரையில், யானைகள் இருக்கும் இடத்தை அதன் வெப்பநிலையை வைத்து (சிகப்பு கலரில் தனியாக தெரியும்) யானையின் இருப்பிடத்தை துல்லியாக கண்டறிய முடியும்.