| ADDED : ஜூன் 29, 2024 02:52 AM
ஓசூர்: ஓசூரில், மூன்று தனியார் பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றின் பர்மிட், 15 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் இயங்கும் தனியார் மினி பஸ்கள், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாமல், மாற்று வழித்தடத்தில் சென்று வருவதாகவும், கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாகவும், கலெக்டர் சரயுவிற்கு புகார்கள் சென்றன. அதன்படி, ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி, வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது, வழித்தடம் மாற்றி இயக்கப்பட்ட, மூன்று தனியார் மினி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சரயு, 15 நாட்களுக்கு மினி பஸ்களின் பர்மிட்டை தற்காலிகமாக ரத்து செய்தார். இதையடுத்து அவற்றை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.இதேபோல், வழித்தடம் மாற்றி இயக்கப்பட்டது மற்றும் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக மேலும், 7 தனியார் பஸ்களுக்கு வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. அந்த பஸ்களுக்கு அபராதம் அல்லது பர்மிட் ரத்து செய்வதற்கான பணிகளை, ஓசூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் செய்து வருகின்றனர்.