| ADDED : ஆக 15, 2024 07:07 AM
ஓசூர்: ஓசூர் தாலுகா, அச்செட்டிப்பள்ளி கிராமத்தில், மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம், 165 பயனாளிகளுக்கு, 63.33 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, அவர் பேசியதாவது: பெண் குழந்தைகளுக்கு, 18 வயது பூர்த்தியடையும் முன்பே திருமணம் செய்து வைக்கிறார்கள். அதனால், அவர்களால் கல்வி கற்க முடியவில்லை. 18 வயதிற்கு முன்பாக திருமணம் செய்து வைப்பதால், எடை குறைவு, உயரம் குறைவு போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. மாவட்டத்தில் குழந்தை திருமணம் மற்றும் சிறு வயதில் குழந்தை பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஓசூர், கெலமங்கலம், தளி மற்றும் அஞ்செட்டி பகுதிகளில், கல்வியில் தகுதி அடைபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஒரு சமுதாயம் முன்னேற, குழந்தைகள் படித்தால் தான் முடியும். ஆகையால், கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.