| ADDED : மார் 31, 2024 04:25 AM
வாடிப்பட்டி, : ''தினகரனின் மறு உருவமும் தெரியும், மர்ம உருவமும் எனக்கு தெரியும்'' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.தேனி தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி, சோழவந்தான் பேரூர், ஒன்றிய பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: தேனி தொகுதியில் 8 முறை அ.தி.மு.க., வென்றுள்ளது. 2 முறை தான் தி.மு.க., வென்றுள்ளது. 10 ஆண்டுகள் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த தினகரன், ஜெயலலிதா மறைவுக்கு பின் மீண்டும் தலைகாட்டி வருகிறார். என்னை 'பபூன்' என்று விமர்சித்துள்ளார். பபூனால் எந்த தீமையும் ஏற்படாது. வில்லன் பி.எஸ்.வீரப்பா போன்றவர் தினகரன். வேட்பாளர் நாராயணசாமி ஹீரோ. இறுதியில் ஹீரோ தான் வெற்றி பெறுவார்.ஜெயலலிதா இருந்த காலத்தில் எங்களை மிரட்டினீர்கள். நாங்களும் பயந்தது உண்மை. அன்று வீட்டு காவல் நாயாக கூட இருந்தோம். இன்று 2 கோடி தொண்டர்களும் சீறும் சிங்கமாக மாறிவிட்டோம். தினகரனின் மறு உருவமும் தெரியும், மர்ம உருவமும் எனக்கு தெரியும். நாவடக்கத்துடன் அவர் பேச வேண்டும். தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.,விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளதால் தோல்வி பயத்தில் தி.மு.க. 7 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டது என்றார்.