உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

மருத்துவமனையில் திருடியவர் கைது

வாடிப்பட்டி: தாதம்பட்டியில் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நர்ஸாக லட்சுமி 40, பணியாற்றுகிறார். இவர் நேற்று முன்தினம் கிராம பகுதிகளுக்கு சென்று திரும்பியபோது சுகாதார நிலையத்தில் இருந்த எடை பார்க்கும் இயந்திரம், அலைபேசி உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின. வாடிப்பட்டி போலீசார் அதேபகுதி மகாமுனியை 20, கைது செய்து திருடிய பொருட்களை மீட்டனர்.

போலி நியமன ஆணை வழங்கியவர் கைது

திருமங்கலம்: இப்பகுதி தெற்கு தெரு தமிழரசன் 55. இவரது மகன் சிவமூர்த்தி. இவர்களிடம் மேல உரப்பனுார் சிவமுருகன், அவரது மகன் சிவா, மனைவி செல்வி, கோரிப்பாளையம் உத்தரவேல் ஆகியோர், ''ரூ. 9 லட்சம் கொடுத்தால், ரயில்வே பணி வாங்கி தருகிறோம். நியமன ஆணை வழங்கியபின் பணம் பெற்றுக் கொள்கிறோம்'' என்றனர். 2022-ல் சிவமூர்த்திக்கு பணி நியமன ஆணையை கொடுத்துவிட்டு ரூ.9 லட்சம் பணம் பெற்றனர். டில்லியில் வேலையில் சிவமூர்த்தி சேர முயன்ற போது அது போலி ஆணை எனத் தெரிந்தது. தமிழரசன் புகாரில் 4 பேர் மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வெந்நீர் ஊற்றிய மூவர் கைது

திருமங்கலம்: உலகாணி லாரி டிரைவர் கருப்பு 32. இவரது மனைவி ஜோதிமணி 28. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் கருப்புவுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனால் வேலைக்கு போகாமல் இருந்தார். மனைவி வேலைக்கு செல்கிறார். அவர்களுடன் மாமனார் மாமியாரும் வசிக்கின்றனர். குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் கருப்புவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறி வெந்நீரை ஊற்றினர். உடல் வெந்த நிலையில் கருப்பு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி, மாமனார் முருகன், மாமியார் மாணிக்கவல்லியை கூடக்கோவில் போலீசார் கைது செய்தனர்.

அவனியாபுரத்தில் வாலிபர் கொலை

அவனியாபுரம்: பராசக்தி நகர் நாராயணன் மகன் மனோஜ் 23. மீனாட்சி பஜாரில் கடையில்வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு நண்பர்கள் வந்துள்ளனர். வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற மனோஜ் வீடு திரும்பவில்லை. நேற்று காலை வரை வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தேடினர். பராசக்தி நகர் வயல் பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். கொலைக்கான காரணம் குறித்து அவனியாபுரம் போலீசார் விசாரித்தனர்.

உதவி செய்வது போல் திருட்டு

கொட்டாம்பட்டி: விநாயகபுரம் விவசாயி செல்வராஜ் 56. மேலுார் ஏ.டி.எம்., மில் பணம் எடுக்கச் சென்றார். பார்வை குறைபாடு உள்ளதால் அங்குஇருந்த பெண்ணிடம் ரூ.10 ஆயிரத்தை எடுத்துத்தர கூறினார். சிறிது நேரத்தில் செல்வராஜ் அலைபேசிக்கு ரூ.28 ஆயிரம் எடுத்ததாக எஸ்.எம்.எஸ்., வரவே, தன்னை அப்பெண் ஏமாற்றி கார்டை மாற்றி கொடுத்து பணத்தை எடுத்தது தெரிந்தது. இதுதொடர்பாக சொக்கம்பட்டி மகாலட்சுமியை 44, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி