| ADDED : டிச 01, 2025 05:42 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா 6ம் நாளான நேற்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகினர். சைவ சமய வரலாற்று லீலையையொட்டி வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்யகிரீஸ்வரர், பிரியாவிடை, பல்லக்கில் சீவலிநாயகர், திருஞானசம்பந்தர் புறப்பாடாகி 16 கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர். அங்கு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை முடிந்து புராண கதையை பக்தர்களுக்கு கோயில் ஓதுவார் கூறினார். தீபாராதனைக்கு பின்பு சுவாமிகள் ரதவீதிகளில் புறப்பாடாகி அருள்பாலித்தனர். இன்று (டிச. 1) காலையில் கங்காள நாதர் சுவாமி புறப்பாடும், மாலையில் நடராஜமூர்த்தி, சிவகாமி அம்மன், காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை விதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். டிச. 2ல் பட்டாபிஷேகம், டிச. 3 காலையில் தேரோட்டம், மாலையில் மலை மேல் மகா தீபம், 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை காட்சி நடைபெறும்.