| ADDED : ஜன 20, 2024 05:01 AM
திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றியம் கிழவனேரியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் இடிந்த நிலையில் உள்ளதால் பாம்பு , தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தஞ்சம் அடைந்துள்ளன.அந்த சுகாதார வளாகத்தை பெண்கள், குழந்தைகள் பயன்படுத்த முடியாமல், திறந்தவெளியாக உள்ள கண்மாய் உள்ளிட்ட பகுதிகள், காடுகளுக்கு செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெண்கள், குழந்தைகள் தவித்து வருகின்றனர்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை தற்போது வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. அந்த கட்டடத்திற்கு ரேஷன் பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் செல்வதற்கும் போதிய பாதை வசதி இல்லை. இதனால் ரேஷன் கடையே ஒரு சாவடியில்தான் செயல்பட்டு வருகிறது.மேலும் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட வசதிகள் இன்றி, நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக கிழவனேரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.