| ADDED : ஜூலை 24, 2011 11:51 PM
பரவை : மதுரை அருகே பரவையில் அடிப்படை வசதியின்றி செயல்படும் கிளை நூலகத்திற்கு போதிய கட்டடம் கட்டப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். பரவை பேரூராட்சி அங்கன்வாடி மைய கட்டடத்தின் ஒரு பகுதியில் சிறிய அறையில் பல ஆண்டுகளாக கிளைநூலகம் செயல்படுகிறது. இங்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. சிறிய அறையில் வைக்க இடமில்லாமல், புத்தகங்கள் திண்ணையில் குவித்து வைக்கப்படுகின்றன. பரவை, ஊர்மெச்சிக்குளம், மில் காலனி, சத்தியமூர்த்திநகர் உட்பட பல பகுதிகளை சேர்ந்த ஐயாயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.
வாசகர்கள் படிக்க வசதியின்றி வாசலில் அமர்கின்றனர். கழிப்பறை வசதி இல்லை. எந்த அடிப்படை வசதியின்றி தவிக்கும் வாகர்கள், நூலகத்திற்கு கட்டடம் கோரி மாவட்ட நூலக அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பரவை பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் நூலகம் கட்டடம் கட்ட இடம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடம் ஒதுக்கப்பட்டும் கட்டடடம் கட்டாமல் நூலகத்துறை அலட்சியம் காட்டுகிறது. சமூக ஆர்வலர் சவுந்திரபாண்டியன் கூறுகையில், ''பரவை ஆர்.ஐ.,அலுவலகம் அருகே உள்ள புறம்போக்கு இடத்தை பேரூராட்சி ஒதுக்கியுள்ளது. இடியும் நிலையில் உள்ள பழைய கட்டடத்தில் வாசகர்கள் படிக்க பயப்படுகின்றனர். ஆக.4 ல் மறியல் செய்ய வாசகர்கள் முடிவு செய்துள்ளனர்,'' என்றார்.