உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீரை திறங்க... தண்ணீ காட்டாதீங்க... கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போர்க்கொடி

தண்ணீரை திறங்க... தண்ணீ காட்டாதீங்க... கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போர்க்கொடி

மதுரை: மேலுார், திருமங்கலம் ஒருபோக சாகுபடிக்கு செப்.,15க்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் போர்க்கொடி துாக்கினர்.கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சக்திவேல், கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும் மனுக்கள் வாசிப்பதற்கு முன்பாக மேலுார், திருமங்கலம் விவசாயிகள் தங்கள் பகுதி பாசனத்திற்கு முன்கூட்டியே திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.அவர்கள் கூறியதாவது: கடந்தாண்டு மிகத் தாமதமாக தண்ணீர் திறந்ததால் அறுவடைக்கு 20 நாட்கள் முன்பாக வடகிழக்கு பருவமழை பெய்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. இதற்கு முன்பாக ஆகஸ்டில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு ஆவணங்கள் உள்ளன. முல்லைப்பெரியாறு அணையில் 121 அடி இருந்தாலே தண்ணீரை திறக்கலாம். தற்போது 129 அடியைத் தாண்டியுள்ள நிலையில் செப்., 15 வரை காத்திருக்க தேவையில்லை. முன்கூட்டியே தண்ணீரைத் திறந்தால் நாற்று நடவு பணிகளை தொடரமுடியும் என்றனர். செப்., 15 ல் உறுதியாக தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை செயற்பொறியாளர் தெரிவித்த போதும் விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.இதையடுத்து பேசிய கலெக்டர் பேசியதாவது: அடுத்த வாரம் கூட்டம் நடத்தி முன்கூட்டியே திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். மின்தடை தொடர்பான புகார்களுக்கு 94987 94987 அலைபேசி மூலம் தெரிவிக்கலாம். லைன்மேன்களை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டியதில்லை. பெறப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது. பெரியருவி நீர்தேக்கம் மற்றும் வரத்துக் கால்வாயை துார்வாருவதற்கான திட்டமதிப்பீட்டை மீண்டும் தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்புங்கள். கண்மாய்கள், வரத்து கால்வாய்களில் முட்புதர்கள் இருந்தால் அவற்றை ஏலத்திற்கு விட ஏற்பாடு செய்யுங்கள். களிமங்கலம் குன்னத்துார் கண்மாயில் உள்ள முட்புதர்களை அகற்ற நீர்ப்பாசன சங்கங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். வெளிநபர்களுக்கு ஏலம் விடுவதற்காக தாமதிக்க வேண்டாம். குறைந்தபட்ச ஏலத்தொகையை மட்டும் நிர்ணயம் செய்ய வேண்டும். அசுவமாநதியிலும் இதே முட்புதர்கள் பிரச்னை தான் உள்ளது. இவற்றை முழுவதும் அகற்றுவதற்கு நம்மிடம் நிதி ஆதாரம் போதுமான அளவில் இல்லை. நீர்வளத்துறை அதிகாரிகள் தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதியைப் பெற்று இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம். கிருதுமால் நதியை துார்வாருவதற்கும் சி.எஸ்.ஆர். நிதியை பெற திட்டமிட்டுள்ளோம்.மதுரையில் தோட்டக்கலை துறை சார்பில் தென்னை உற்பத்தி பண்ணை அமைக்க விவசாயிகள் இடம் தர தயாராக உள்ளனர். அதற்கான ஆய்வக வசதிகள் அமைப்பது குறித்து தோட்டக்கலை துறை ஏற்பாடு செய்ய வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை