| ADDED : ஜன 09, 2024 05:50 AM
மேலுார் : ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு கொடுப்பதற்காக விவசாயிகளிடம் கரும்பை குறைந்த விலைக்கு வாங்கும் இடைத்தரகர்கள் கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர்.தமிழக அரசு அறிவிப்பின் படி மேலுாரில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் 96 ஆயிரம் பேர் உள்ளனர். இத் தொகுப்பிற்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கரும்பு, போக்குவரத்து செலவு மற்றும் வெட்டுக்கூலி சேர்த்து ரூ.33 க்கு விலைக்கு வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இடைத்தரகர்கள் கரும்பை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர்.விவசாயி அய்யணன் கூறியதாவது: விவசாயிகள் கரும்பை வெட்டி ஏற்றுவதற்கு ஒரு கரும்புக்கு ரூ. 17 என, இடைத்தரகர்கள் பணம் கொடுக்கின்றனர். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள விலையோ ரூ.33. விலை வித்தியாசம் குறித்து இடைத்தரகர்களிடம் கேட்டால் கொள்முதல் பொறுப்பை அதிகாரிகள் அவர்களிடம் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.வேறு வழியின்றி இடைத்தரகர்களிடம் கரும்பை விற்கும் நிலைக்கு ஆளாகிறோம். தனியாமங்கலம், சருகு வலையபட்டி, நாவினிபட்டி விவசாயிகளிடம் குறைத்து வாங்கும் இடைதரகர்கள் கூடுதலாக வாங்குவதாக கணக்கில் முறைகேடு செய்கின்றனர். கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நேரில் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு, என்றார்.கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில்,இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.