உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போலி தங்க நாணயம் கொடுத்து ரூ.20 லட்சம் மோசடி: 2 பேர் கைது

போலி தங்க நாணயம் கொடுத்து ரூ.20 லட்சம் மோசடி: 2 பேர் கைது

ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் அதிசயராஜ் மனைவி பத்மாவதி, 41. இவர், நாமகிரிப்பேட்டை சேனியர் தெருவில் உள்ள கார்மெர்மென்ட்சில் வேலை செய்து வந்தார். இதே கார்மென்ட்சில், அன்னை சத்யா நகரை சேர்ந்த பாஷா மகன் சேட்டு, 52, வேலை பார்த்து வந்தார். நான்கு நாட்களுக்கு முன் பத்மாவதியிடம் பேசிய சேட்டு, 'எனக்கு தெரிந்த நண்பரிடம் 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயங்களை, 45 லட்சம் ரூபாய்க்கு விற்க தயாராக உள்ளனர். உங்களுக்கு வேண்டுமென்றால் வாங்கி தருகிறேன்' என கூறினார்.பத்மாவதி, 20 லட்சம் ரூபாயை கொடுத்து அதன் மதிப்பிற்கு தங்க நாணயங்களை வாங்கி கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து, சேட்டு மற்றும் அவரது நண்பரான வேங்காத்தார் காலனியை சேர்ந்த முகமது ஜாவித், 34, ஆகிய இருவரும் தரத்தை சோதிக்க, இரண்டு தங்க நாணயங்களை கொடுத்தனர். இதை சோதனை செய்த பத்மாவதி, இரண்டும் துாய்மையான தங்கம் என்பதை தெரிந்து கொண்டார். அதை தொடர்ந்து, சேட்டு, முகமது ஜாவித் இவர்களுடன் பத்மாவதி மற்றும் அவரது உறவினர்கள் சிலர் சேர்ந்து, 20 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பெங்களூரில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு வந்த சேட்டு, ஜாவித் நண்பரான ராஜேஸ், 20 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு, 1,600 தங்க நாணயங்களை கொடுத்தார்.தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட பத்மாவதி, நாமகிரிப்பேட்டையில் மீண்டும் சோதனை செய்து பார்த்தார். அப்போது அந்த நாணயங்கள் அனைத்தும் போலியானது என தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தார்.இதையடுத்து, கடந்த, 2ல் நாமகிரிப்பேட்டை போலீசில் பத்மாவதி புகாரளித்தார். புகார்படி, சேட்டு, முகமது ஜாவித் ஆகிய இருவரையும், நேற்று கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ராஜேசை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி