நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் சேர 5,968 பேர் ஆன்லைனில் விண்ணப்பம்
நாமக்கல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், இளநிலையில், 13 பாடப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் சேர, 5,968 மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த, 2ல் தொடங்கியது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். முதல்நாள், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீராங்கனைகள் உள்ளிட்டோருக்கு நடந்தது. இதில் விளையாட்டு ஒதுக்கீட்டில், 16 பேர், மாற்றுத்திறனாளிகள், 6 பேர் என, மொத்தம், 22 மாணவியர் சேர்க்கை பெற்றனர். நேற்று பொது பிரிவில் பி.காம்., வணிகவியல், பி.ஏ., பொருளியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. 1,000க்கும் மேற்பட்ட மாணவியர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், ஒரு இடத்திற்கு, 3 மாணவியர் என்ற அடிப்படையில் மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்த பேராசிரியர்கள் சேர்க்கைக்கான உத்தரவை வழங்கினர்.'தொடர்ந்து, வரும், 14 வரை, மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது' என, கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.