| ADDED : ஜன 20, 2024 07:20 AM
ப.வேலுார் : 'தரிசு நிலம்' என உள்ளதை, 'சுடுகாடு' என, பெயர் மாற்றம் செய்துதரக்கோரி, ப.வேலுார் தாலுகா அலுவலகம் முன், இ.கம்யூ., கட்சியினர் மற்றும் மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ப.வேலுார் அருகே, மணியனுாரில் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வரும், 'சுடுகாடு' அரசு ஆவணங்கள்படி, 'தரிசு நிலம்' என உள்ளது. அதை சுடுகாடு என பெயர் மாற்றம் செய்து தரக்கோரி, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்தனர். ஆனால், இதுகுறித்து வருவாய்த் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இ.கம்யூ., கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி தலைமையில், மணியனுாரை சேர்ந்த மக்கள், 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த ப.வேலுார் தாசில்தார் கலைச்செல்வி மற்றும் வருவாய்த்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்ததால், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.