புதுச்சத்திரம், நாமக்கல் மாவட்டத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், உயர் மருத்துவ சேவை முகாம், ஒவ்வொரு வட்டாரத்திற்கும், 3 வீதம், 15 வட்டாரங்களில், 45 முகாம்கள், ஒரு மாநகராட்சிக்கு, 3 வீதம், என மொத்தம், 48 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதி, மருத்துவ வசதி குறைவாக உள்ள நகர்ப்புற பகுதிகளை தேர்ந்தெடுத்து, வாரந்தோறும் சனிக்கிழமை, காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை, பல்வேறு துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லுாரி வளாகங்களில் முகாம் நடத்தப்படுகிறது.அதன்படி, களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடந்தது. மாவட்டத்தில், 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் பாதிப்புடையோர், இதயநோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலுாட்டும் தாய்மார்கள், உள்ளிட்டோரை இலக்காக கொண்டு, இம்முகாம் நடத்தப்படுகிறது. முகாமில், 17 துறைகளை சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.கலெக்டர் துர்கா மூர்த்தி, முகாமை ஆய்வு செய்தார். அப்போது, ''முகாமில் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களால் பரிசோதனை செய்து, சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் நோயாளிகளுக்கு தலைமை மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது,'' என்றார். தொடர்ந்து, உடனடி தீர்வாக, ஒரு மாற்றுத்திறனாளி மாணவனுக்கு அடையாள அட்டை வழங்கினார்.