உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் அனுமனுக்கு வடைமாலை அறநிலையத்துறையே சார்த்துப்படி

நாமக்கல் அனுமனுக்கு வடைமாலை அறநிலையத்துறையே சார்த்துப்படி

நாமக்கல்:நாமக்கல்லில் உள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில், 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார். இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று, வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.முன்னதாக விழாவை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடைகள் சாற்றுபடி செய்வதற்கு உபயதாரர் கிடைக்காத நிலை இருந்தது. இதற்கு, 10 லட்ச ரூபாய் செலவாகும் என்பதால், அறநிலையத்துறை சார்பில் பணம் செலவழிக்க முன்வரவில்லை. இதை கண்டித்து, ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதையடுத்து, அறநிலையத்துறையினர் சார்பில் வடை மாலை சார்த்துபடிக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.வடை மாலை தயாரிப்பு பணி, கடந்த 7ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து, மாலைகளாக கோர்க்கப்பட்டன. இதில், 20க்கும் மேற்பட்ட கோவில் பட்டாச்சாரியார்கள் ஈடுபட்டனர்.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, ஒரு லட்சத்து, 8 வடை மாலை சாற்றுபடி செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பகல், 11:00 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு, வாசனைப் பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின், தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மதியம், 1:00 மணிக்கு மகா தீபாரதனை நடந்தது.உள்ளூர், வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், நள்ளிரவு முதலே தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.நெரிசலை தவிர்க்க கோட்டை ரோடு, பார்க் ரோடு பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்