| ADDED : நவ 20, 2025 01:56 AM
நாமக்கல், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், நில அளவை களப்பணியாளர்களின், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். இணை செயலாளர் கபிலன் வரவேற்றார். நாமக்கல், திருச்செங்கோடு கோட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கோரிக்கை குறித்து விளக்கினார்.ஆர்ப்பாட்டத்தில், களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க முன்வராமல், உட்பிரிவு பட்டா மாறுதல் பணியை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கை கைவிட வேண்டும். நில அளவர்களாக ஒரு முறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை, மீண்டும் தரம் உயர்த்தி வழங்க வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட குறுவட்டங்கள் மற்றும் கோட்டங்களுக்கு குறுவட்ட அளவர், ஆய்வாளர் பணியிடம் வழங்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., மூலம் நில அளவர் பணிக்கான தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளதால், நில அளவர்கள் காலிப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. பட்டா மாறுதல் உள்ளிட்ட நில அளவை பணிகளை கருத்தில் கொண்டு, உடனடியாக நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளர், ஆய்வாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை முற்றிலும் கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு, நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும் என்பன உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.