| ADDED : ஏப் 27, 2024 12:34 AM
பந்தலுார்:பந்தலுார் அருகே ஜவுளி கடையில் பரவிய தீயால் துணிகள் எரிந்து சேதமானது.பந்தலுார் அருகே சேரம்பாடி பஜாரில் வர்கீஸ் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை சாத்திவிட்டு சென்ற நிலையில், நேற்று அதிகாலை, 4:00- மணிக்கு கடையில் தீ ஏற்பட்டு உள்ளது. துணிகள் எரியும் நாற்றம் மற்றும் வெடித்து சிதறும் சப்தத்தை கேட்டு அருகில் இருந்த வியாபாரிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள், வந்து தீ எரிவதை பார்த்துவிட்டு கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தீ துணிகளில் பற்றி எரிய துவங்கிய நிலையில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தண்ணீரை ஊற்றி பரவிய தீயை கட்டுப்படுத்தினர். தீயில் துணிகள் எரிந்து கருகிய நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில், இழப்பு ஏற்பட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி போலீசார் மற்றும் வருவாய் துறையினர், சேரங்கோடு ஊராட்சி மன்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரில் ஆய்வு செய்தனர். 'மின் கசிவால் தீ ஏற்பட்டு பரவியிருக்க கூடும்,' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.