| ADDED : மே 16, 2024 05:21 AM
பந்தலுார் : பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் குடியிருப்புகளை ஒட்டி வனம் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனால், அடிக்கடி பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்கின்றன. இந்நிலையில், நேற்று பகல் நேரத்தில் தேவாலா அருகே கைத கொல்லி பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் கோதுமை நாகம் ஒன்று வந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பாம்பை மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'வெயிலின் தாக்கம் உள்ள நிலையில், பாம்புகள் குளிர்ச்சியான இடங்களை நாடி வரும். எனவே, குடியிருப்பு பகுதிகளில், துாய்மையாக வைத்து கொள்வதுடன் பாம்பு வந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.