ஊட்டி;'விவசாயிகள் விதை நேர்த்தி செய்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி விதைகளின் தரத்தை உயர்த்தி அதிக மகசூல் பெறலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. விதை பரிசோதனை நிலையம் வேளாண்மை அலுவலர் நவீன் அறிக்கை:நீலகிரியில் பிரதானமாக பயிரிடப்படும் பயறு வகை பயிர்களான பட்டாணி மற்றும் பீன்ஸ் விதைகளை, விதை நேர்த்தி செய்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி விதைகளின் தரத்தை உயர்த்தி அதிக மகசூல் பெறலாம். மேலும், விதை நேர்த்தி மூலம் தரமான விதைகள் கிடைப்பதால் வயல்களில் விதைக்கும் விதையின் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டு இருபொருள் செலவை குறைக்கலாம். நீர் விதை நேர்த்தி
பட்டாணி மற்றும் பீன்ஸ் விதைகளை தண்ணீரை கொண்டு இரு முறைகளில் விதை நேர்த்தி செய்யலாம். முதலாவதாக விதைகளை நீரில், 8 முதல் 12 மணி நேரம் ஊர வைப்பதன் மூலம் விதையின் உடலியல் காரணிகள் துாண்டப்பட்டு முளைப்புத்திறன் வேகம் எடுக்கும். அனைத்து விதைகளை சீராக முளைப்பது உறுதி செய்யப்படுகிறது. இரண்டாவதாக, 55 டிகிரி செல்சியஸ் வெப்பம் உள்ள நீரில், 20 முதல் 30 நிமிடம் விதைகளை ஊர வைக்க வேண்டும். பின், விதை நேர்த்தி செய்யும்போது நீரின் வெப்பம், 55 டிகிரி செல்சியசை மிகாமல் இருப்பது அவசியம். ரசாயன விதை நேர்த்தி
பட்டாணி மற்றும் பீன்ஸ் விதைகளுக்கு கிலோவுக்கு, 2 கிராம் என்ற விகிதத்தில் திரம் அல்லது கேப்டான் பூஞ்சாண கொல்லியுடன் நன்றாக கலந்து உலர விட்டு விதைப்பதன் மூலம், 30 முதல் 40 நாட்கள் வரை பூஞ்சாணத்தினால் ஏற்படும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான 'ட்ரைக்கோடெர்மா; சூடோமோனாஸ் ப்லோரசன்ஸ் அல்லது பேசிலஸ் சப்டிலீஸ்' ஆகியவற்றை ஒரு கிலோ விதைக்கு தலா, 4 கிராம் வீதம் நன்றாக கலந்து விதைப்பதால் பயிர்களை தாக்கக்கூடிய நோய்களை நீண்ட காலம் கட்டுப்படுத்தலாம். விவசாயிகளுக்கு கூடுதல் தகவல் ஏதேனும் தேவைப்பட்டால், ஊட்டி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.