| ADDED : ஜன 18, 2024 02:50 AM
குன்னுார் : குன்னுார் அருவங்காட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தி, 24 நாட்களில் கழித்து, பா.ஜ.,வினர் மீது வழக்கு தொடுத்த போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குன்னுார் அருவங்காடு அருகே ஜெகதளா பேரூராட்சியில் சாலை சீரமைக்காதது உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காண கோரி, கடந்த மாதம் 24ம் தேதி அருவங்காட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்நிலையில், 24 நாட்கள் கழித்து நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தது தொடர்பாக விசாரணைக்கு நேற்று வரவழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாரதிய மஸ்துார் சங்க மாவட்ட செயல் தலைவர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், ''ஜெகதளா சாலை சீரமைக்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதே போல, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நெடுஞ்சாலை விபரத்தில் டாஸ்மாக் கடைகள் வைக்கக் கூடாது என்ற உத்தரவு இருந்தும் அதை மீறி இந்த பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீசாருக்கு கடிதம் கொடுத்து நடத்தப்பட்டது. எனினும், 24 நாட்கள் கழித்து வழக்குபதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இது குறித்து எஸ்.பி., விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.