| ADDED : நவ 17, 2025 01:09 AM
பந்தலூர்: டான் டீ தோட்டம் நஷ்டமடைய காரணமான அதிகாரிகள் மீது நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பந்தலூர் அருகே தேவாலா தனியார் மண்டபத்தில், விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில மாநாடு நடந்தது. நிர்வாகி பிரியதர்ஷினி வரவேற்றார். சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் ராமராஜ், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பஞ்சாப் பாரத் கிஷான் யூனியன் தேசிய தலைவர் ராஜேந்திர சிங் பங்கேற்று, கூடலூர் தொகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள, நிலங்களுக்கு பட்டா வழங்குவது, டான் டீ நிலங்களை தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுப்பது, குடியிருப்புகளுக்கு மின்சாரம், வனவிலங்கு தொல்லையிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது குறித்து பேசினார். தொடர்ந்து, கேரளா விவசாய சங்க தலைவர் ஜோன், சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், வக்கீல் விஜயன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கணேசன், டான் டீ மக்கள் வாழ்வாதார முன்னணி தலைவர் காந்தரூபி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினார்கள். கூட்டத்தில், டான் டீ தோட்ட தொழிலாளர்களை காப்பாற்றும் வகையில், நிலங்களை அவர்களுக்கே பிரித்து வழங்கவும், டான் டீ தோட்டம் நஷ்டமடைய காரணமான அதிகாரிகள் மீது நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், வனப்பகுதிகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில், கலைச்செடிகள் மற்றும் அன்னிய மரங்களை அகற்றவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், விவசாய தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பங்கேற்றனர். மாணவரணி நிர்வாகி ஜனா நன்றி கூறினார்.