| ADDED : ஜன 01, 2026 06:58 AM
பந்தலுார்: பந்தலுார் அருகே சாலை ஓரத்தில், யானைகள் முகாமிட்டு உள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பந்தலுார் அருகே, வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சேரம்பாடி சோதனை சாவடி அமைந்துள்ளது. கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில் இருந்து வயநாடு, கோழிக்கோடு செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில், உள்ள குடியிருப்புகளுக்கு அருகே தேயிலை தோட்டத்தை ஒட்டி, 15க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. தற்போது, கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், சாலையோர சதுப்பு நிலத்தில் தண்ணீர் மற்றும் உணவு இருப்பதால், இந்தப் பகுதியில் யானைகள் கூட்டமாக முகாமிட்டு உள்ளது. சாலை ஓரத்தில் யானைகள் நிற்பதாலும், இரவு நேரத்தில் சாலைக்கு வந்து செல்லும் என்பதாலும், வனச்சரகர் அய்யனார் மேற்பார்வையில், வனத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், ''குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டு உள்ளதால், இந்த வழியாக வந்து செல்லும் சுற்றுலா பயணிகள், யானையை பார்த்து ரசிப்பதாக கூறி, சாலையில் இறங்கி யானைக்கு தொல்லை தரக்கூடாது,' என்றனர்.