| ADDED : பிப் 29, 2024 11:33 PM
கருமத்தம்பட்டி:கணியூர் குடிகொங்கலம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கினர்.கணியூரில் உள்ள குடிகொங்கலம்மன் கோவிலில் கடந்த, 20ம் தேதி காலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் குண்டம் திருவிழா துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றம் நடந்தது. தினமும் சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பில் கட்டளை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் தீர்த்தக்கரகம், பால் குடம் எடுத்து வரப்பட்டது. கணியூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. நேற்று காலை, விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு நடந்தது. காலை 7:00 மணிக்கு ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். மதியம் அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது மாலை 4:00 மணிக்கு பெண்கள் மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். மாவிளக்கு பூஜைக்குப்பின் இளையோன் கலைக்குழுவின் காவடியாட்டம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.