| ADDED : பிப் 23, 2024 11:31 PM
குன்னுார்;அரசின் புதிய பஸ் டயர் பஞ்சராகி அருவங்காட்டில் நின்றதால், பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.நீலகிரி மாவட்டத்திற்கு சமீபத்தில் 13 புதிய அரசு பஸ்களை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், எம்.பி. ராஜா ஆகியோர் துவக்கி வைத்தார். நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் இருந்து கோவைக்கு புறப்பட்ட புதிய அரசு பஸ்சில், 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் அருவங்காடு பகுதியில் வந்த போது டயர் பஞ்சராகி நின்றது. இதனால் பயணிகள் இறக்கி விடப்பட்டு மாற்று அரசு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஸ்டெப்னி டயர் இல்லாததால் மாற்று பஸ்சில் இருந்து டயரை பெற்று டயரை மாற்றினர்.பயணிகள் கூறுகையில், ' எக்ஸ்பிரஸ் பெயர்களில் கோவை உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் அதிகளவில், குன்னுார், அருவங்காடு, பிளாக் பிரிட்ஜ், பாய்ஸ் கம்பெனி வெலிங்டன் பகுதி மக்ககள் பயணிக்கின்றனர். ஏற்கனவே குறைந்த பஸ்களை இயக்குவதால் கூட்ட நெரிசலில் பயணித்து வந்த பிறகு, டயர் பஞ்சரானதால் மாற்று பஸ்களில் அனுப்பி வைத்தனர். புதிய பஸ்களில் உள்ள டயர்களை மாற்றி, பழைய டயர்களில் இயங்குவதால் தான் இத்தகைய பிரச்னை ஏற்படுகிறது,' என்றனர்.