விரைவு நீதிமன்றம் ஐகோர்ட் நீதிபதி உறுதி
கூடலூர் : 'கூடலூரில் விரைவு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எல்பி தர்மாராவ் தெரிவித்தார். மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கூடலூர் கோர்ட்டில் சட்ட உதவி மையம் திறப்பு விழா, கூடலூர் இந்தியன் வங்கி தொடர்பான வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட நீதிபதி பிரேம்குமார் வரவேற்றார்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எல்பி தர்மாராவ் தலைமை வகித்து, சட்ட உதவி மையத்தை திறந்து வைத்து பேசுகையில், ''கூடலூர் கோர்ட்டில் விரைவு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகங்கள், சினிமா தொடர்பான செய்திகள் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மக்கள் பயன்பெரும் வகையில் சமுதாய நோக்குடன் சட்ட உதவி மையம், மக்கள் நீதி மன்றம் பயன்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்றார். விழாவில், சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் கணேசன், நீதிபதிகள் சுப்ரமணி (ஊட்டி), ராமநாதன் (குன்னூர்), ஹரிஹரன் (கூடலூர்), கூடலூர் வக்கீல் சங்க தலைவர் சாக்கோ, இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் ராஜகோபால், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் பங்கேற்றனர்.