| ADDED : ஆக 17, 2024 01:26 AM
ராமநாதபுரம்:-போதைப்பொருள் திருடி தலைமறைவாகி தப்பி தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கு விசாரணை செப்.,9க்கு தள்ளி வைக்கப்பட்டது.இலங்கை கொழும்பு புறநகர் சபுகஸ்கந்த பகுதி மரக்கடையில் இருந்து 2020- ஆக.,26-ல் இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இந்த கடத்தல் தொடர்பாக அனுர குமார என்பவரை கைது செய்தனர். இவர் இலங்கை துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் பிரதீப் குமார் பண்டாரா 32, அண்ணன் என தெரிந்தது.துறைமுகம் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதை பொருளை பிரதீப் குமார் பண்டாரா பணி நேரத்தில் திருடி அண்ணனிடம் கொடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அவரையும் வழக்கில் சேர்க்க முடிவு செய்தனர். இதை அறிந்தவர் பைபர் படகில் தமிழகம் தப்பி வந்தார்.பிரதீப் குமார் பண்டாராவை 2020 செப்.,4 ல் மண்டபம் கடலோர காவல்படை போலீசார் கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டார். ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குமரகுரு முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கை போலீஸ்காரர் பிரதீப்குமார் பண்டாரா நேரில் ஆஜரானார். நீதிபதி வழக்கை செப்.,9க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.