| ADDED : ஜன 06, 2024 05:41 AM
பரமக்குடி: -ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே அரசு மாதிரிப் பள்ளியாக பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ள நிலையில் இங்கு ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதுடன் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி வருகிறது.எமனேஸ்வரம் பகுதியில் எஸ்.என்.வி., அரசு மாதிரிப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 புதிய குரூப்கள் துவங்கப்பட்டன. ஆனால் எகனாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுன்டன்சி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் பணியிடம் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது.மேலும் போதிய வகுப்பறைகளின்றி மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். பள்ளி காம்பவுண்ட் சுவர் ஆங்காங்கே இடிந்த நிலையில் சில இடங்களில் ஆபத்தாக உள்ளது. கழிப்பிட வசதிகள் இல்லாததால் மாணவர்கள் இயற்கை உபாதைகளுக்கு சிரமப்படுகின்றனர். முக்கியமாக மழை பெய்யும் நேரங்களில் மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் உள்ளது. எனவே கல்வியின் முக்கியத்துவத்தை கருதி மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.மேலும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரமேஷ் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் வலியுறுத்தினர்.