| ADDED : ஜன 17, 2024 11:54 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே கிழக்குகடற்கரை சாலையில் 24 மணிநேரம் போக்குவரத்து மிகுந்த கீழக்கரை, துாத்துக்குடி செல்லும் வழியில் உள்ள பாலத்தில் பல இடங்களில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. விபத்திற்கு முன்பு சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். ராமநாதபுரம் கிழக்குகடற்கரை சந்திப்பு துாத்துக்குடி செல்லும் வழியில் அரை கி.மீ., துாரத்திற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக திருப்புல்லாணி, கீழக்கரை, துாத்துக்குடி, சாயல்குடி என வெளியூர், கிராமங்களுக்கு தினமும் ஏராளமானவர்கள் வாகனங்களில் செல்கின்றனர். 24 மணிநேரமும் வாகன போக்குவரத்து உள்ள இந்தப்பாலம் பல ஆண்டுகளாக சரிவர பராமரிக்கப்படாமல் மின்விளக்குகள் காட்சிப்பொருளாக உள்ளன. * பல இடங்களில் பள்ளம்: இந்தநிலைமையில் தற்போதைய மழைக்கு பாலத்தில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. குறிப்பாக பாலத்திலிருந்து இறங்கும் இடத்தில் மண்அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளங்கள் உள்ளதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே உயிர்பலிக்கு முன்பாக உடனடியாக பாலத்தில் உள்ள பள்ளங்களை சீரமைக்கவும், மின்விளக்குகளை செப்பனிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.---